புதுடெல்லி: விமான நிலையங்களில் பயணிகள் தங்களின் காத்திருப்பு நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிடும் வகையில், ‘ஃப்ளைபிரரி’ (Flybrary) எனும் இலவச நூலக சேவையை இந்தியப் பொதுப் போக்குவரத்துத் துறையும் இந்திய விமான நிலைய ஆணையமும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன.
இத்திட்டத்தின்கீழ், பயணிகள் விமான நிலைய அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள நூல்களை இலவசமாக எடுத்துப் படிக்கலாம். தாங்கள் பயணம் செய்யும் விமானத்திலும் அந்நூலை எடுத்துச் சென்று படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பயணிகள் சென்றடையும் விமான நிலையத்தில் உள்ள ‘ஃப்ளைபிரரி’ மையத்தில் அந்நூலைத் திருப்பிச் செலுத்தலாம்.
சில இடங்களில் பயணிகள் நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அடுத்த முறை விமான நிலையம் வரும்போது திருப்பிக்கொடுக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தங்களது நூல்களையும் இத்திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கலாம்.
‘பக்குல்’ அறக்கட்டளையின் நிறுவனர் சுஜித் மகாபாத்ரா என்பவரால் 2025ஆம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் அனைத்துலக விமான நிலையத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது இந்தியா முழுவதிலும் உள்ள 68 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலவச வைஃபை, குழந்தைகள் விளையாட்டுப் பகுதிகள் போன்ற வசதிகளுடன் பயணிகள் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஃப்ளைபிரரி’ திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு தெரிவித்துள்ளார்.


