திருவனந்தபுரம்: கேரள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பிரியதர்சினி திட்டம் ஜூன் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது.
அதனை மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். அதன் மூலம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இருப்பினும், அத்திட்டத்தால் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகத் தனியார் பேருந்து நிறுவனங்கள் கூறி வந்தன.
எனவே, அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனியார் பேருந்து நிறுவனங்கள் இழப்பில் இயங்குவதைத் தடுக்க கோரியும் அரசுக்கு எதிராக ஜூலை 20 ஆம் தேதி முதல் கேரளத் தலைமைச் செயலகத்தின்முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில், காஸர்கோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் ஜூலை 6ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
பாலக்காடு-கோபாலபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) போராட்டத்தில் குதித்தன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இந்த வழித்தடத்தில் தினமும் 10 நிமிட இடைவெளியில் 25க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன.
அந்தப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதால், தனியார் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் இதனால் டீசல் நிரப்ப ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

