புதுடெல்லி: பாகிஸ்தான், பங்ளாதேஷ் நாடுகளுடன் தொடர்புடைய ஆயுதக் கடத்தல் கும்பலை டெல்லி காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
அக்கும்பலைச் சேர்ந்த பத்து பேரிடமிருந்து 21 அதிநவீன துப்பாக்கிகளும் 200 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறை துணை இயக்குநர் சஞ்சீவ் யாதவ் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்மூலம் பாகிஸ்தான், நேப்பாளம், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கடத்தல் கும்பலின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து கடத்தப்படும் ஆயுதங்கள் நேப்பாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு, நாட்டின் பெரு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் டெல்லி மாநகர் விநியோக மையமாகச் செயல்பட்டுள்ளது.
கடத்தல் துப்பாக்கிகள் டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் செயல்படும் குற்றக் கும்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது கைதான கடத்தல் கும்பலானது, அனைத்துலக ஆயுதக் கடத்தல்காரர்களுக்கும் உள்நாட்டு குற்றக் குழுக்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறின.
உயர்தர ஆயுதக்கும்பலின் முக்கியமான விநியோகச் சங்கிலியைத் தகர்த்திருப்பதன் மூலம் வடஇந்தியாவில் இயங்கிவரும் குற்றக் குழுக்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், இக்கும்பலின் இதர தொடர்புகள் ஆயுதங்களைக் கடத்தி வந்ததன் நோக்கம் ஆகியவை கவலை அளிப்பதாகவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

