கோல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் செளரவ் கங்குலி சென்ற கார் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) விபத்தில் சிக்கியது.
வேகமாகச் சென்ற லாரியின் மீது கார் மோதியதில், பெரிய காயங்களின்றி கங்குலி உயிர்தப்பினார்.
பர்த்வான் பல்கலைக்கழக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கங்குலி சென்றுகொண்டிருந்தார். துர்காபூர் விரைவுச் சாலையில் கங்குலியின் கார் சென்றுகொண்டிருந்தபோது, தாதுபூர் அருகே வேகமாகச் சென்ற லாரியின் ஓட்டுநர் திடீரென்று வேகத்தடுப்பானை (பிரேக்) அழுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கங்குலியின் கார் ஓட்டுநரும் வேகத் தடுப்பானை அழுத்த, அவரது காரைத் தொடர்ந்து வந்த இரு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.