மகாராஷ்டிர விரைவுச்சாலையில் எரிவாயுக் கசிவு: 24 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து மாற்றம்

மகாராஷ்டிர விரைவுச்சாலையில் எரிவாயுக் கசிவு: 24 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து மாற்றம்

1 mins read
396abd7a-11c3-471e-a452-37eab79757f8
தகவல் அறிந்தவுடன், மாவட்ட நிர்வாக, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற மும்பை-நாக்பூர் சமிருத்தி விரைவுச்சாலையின் அருகே அமைந்துள்ள ‘கெயில்’ (GAIL) நிறுவனத்தின் எரிவாயுக் குழாயில் திடீரென எரிவாயுக் கசிவு ஏற்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து முற்றிலும் மாற்றிவிடப்பட்டது.

சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம், கங்காபூர் தாலுகாவில் உள்ள தகலிவாடி பகுதி வழியாக இந்த எரிவாயுக் குழாய் செல்கிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை 5 மணி அளவில், விரைவுச்சாலைக்கு அருகில் செல்லும் குழாயில் எரிவாயுக் கசிவு ஏற்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

தகவல் அறிந்தவுடன், மாவட்ட நிர்வாக, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க தீயணைப்பு வாகனங்களும் பாதுகாப்பு உபகரணங்களும் உடனடியாகத் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் வினய் கவுடா தெரிவித்த தகவலின்படி, சமிருத்தி விரைவுச்சாலையில் ஹதாஸ் பிம்பல்கான், மாலிவாடா ஆகிய பகுதிகளுக்கு இடையேயான (சங்கிலித் தொடர் 447 முதல் 470 வரை) 24 கிலோ மீட்டர் தொலைவிலான பாதையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

எரிவாயுக் கசிவை அடைக்க ‘கெயில்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாதிப்படைந்த குழாயின் இருபுறமும் உள்ள வால்வுகளை (Valves) அடைத்து, குழாயினுள் இருக்கும் அழுத்தத்தைப் படிப்படியாகக் குறைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

நிலைமை முழுமையாகச் சீரடைந்ததும், விரைவுச்சாலையில் வழக்கமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்