உலகப் பணக்காரர்கள் வரிசையில் எட்டு இடங்கள் இறங்கினார் அதானி

உலகப் பணக்காரர்கள் வரிசையில் எட்டு இடங்கள் இறங்கினார் அதானி

1 mins read
d450c0aa-b494-4cae-ad74-0cc00ebc5647
இப்போது உலகப் பணக்காரர்களில் 11வது நிலையில் இருக்கிறார் கௌதம் அதானி. படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: இந்தியப் பெருஞ்செல்வந்தரான கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் முதல் பத்து இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் பட்சத்தில் ஆசியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற நிலையையும் அவர் விரைவில் இழக்கக்கூடும்.

உலகப் பணக்காரர்களுக்கான 'புளூம்பெர்க் பில்லியனர்ஸ்' குறியீட்டில் நான்காம் நிலையிலிருந்த கௌதம் அதானி, இப்போது 11ஆம் நிலைக்கு இறங்கிவிட்டார்.

மூன்றே நாள்களில் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 34 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்துவிட்டது.

இப்போது அதானியின் சொத்து மதிப்பு 84.4 பில்லியன் டாலர். சக இந்தியப் பணக்காரரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி அவருக்கு அடுத்த நிலையில், அதாவது 12ஆம் இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 82.2 பில்லியன் டாலர்.

அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு 'ஹிண்டென்பர்க் ஆய்வு' நிறுவனத்தின் அறிக்கை வெளியானதை அடுத்து, மூன்றே நாள்களில் அதானி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. அதனால், அவற்றின் சந்தை மதிப்பு 68 பில்லியன் டாலர் குறைந்தது.

புளூம்பெர்க் தரவரிசையின்படி, பெர்னார்ட் அர்னால்ட் (US$189 பி.), எலோன் மஸ்க் (US$160 பி.), ஜெஃப் பெஸோஸ் (US$124 பி.) ஆகியோர் உலகின் ஆகப் பெரும் பணக்காரர்களில் முதல் மூன்று நிலைகளில் உள்ளனர்.