அரூர் (கேரளா): தம் தந்தையார் திரு அகஸ்டின் நடத்திவரும் கடையிலிருந்து எப்போதாவது பரிசுச்சீட்டு வாங்குவார் திருவாட்டி ஆஷ்லி.
அப்படி அண்மையில் தாம் வாங்கிய பரிசுச்சீட்டிற்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் (S$123,600) விழ, ஆஷ்லி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்.
அத்துடன், முதல் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை விற்ற திரு அகஸ்டினுக்கும் அதற்கான தரகுத்தொகை கிடைக்க, குடும்பத்தினர்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், அரூரில் கடந்த பத்தாண்டுகளாகப் பரிசுச்சீட்டு விற்பனைக் கடையை நடத்தி வருகிறார் திரு அகஸ்டின். அவருக்கு மூன்று மகள்கள். இரண்டாவது மகளான திருவாட்டி ஆஷ்லி அங்குள்ள ஓர் அலுவலகத்தில் கணக்காளராகப் பணிபுரிகிறார்.
திருவாட்டி ஆஷ்லிக்கு பினீஷ் என்ற கணவரும் ஆதிஷ் என்ற மகனும் உள்ளனர்.
தங்களது வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது திருவாட்டி ஆஷ்லியின் கனவு. இப்போது அக்கனவை நனவாக்குவதற்கான வழி பிறந்துள்ளது என்ற அவர், தம் சகோதரிகளுக்கும் உதவ விரும்புகிறார்.