புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்போவதாக கூகல் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் பகுதியில் தரவு நிலையத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு நடுவத்தை அமைக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக மிகப்பெரிய அளவிலான ஒரு ஜிகாவாட் திறன்கொண்ட தரவு நிலையத்தை அது நிறுவுகிறது.
ஏஐ உள்கட்டமைப்பு, பெரியளவிலான எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றுடன் அந்த நிலையத்தை அது அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது.
இந்த முயற்சி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளியல், சமூக வாய்ப்புகளை உருவாக்கும் என கூகல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகளவில் அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்து வரும்நிலையில், அதுகுறித்த ஆராய்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் முழுக் கவனத்தைச் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான், இந்தியாவில் தனது செயற்கை நுண்ணறிவுத் தரவு நிலையத்திற்கான முதலீட்டை கூகல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரத்தில் கூகல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடுவம் அமையவிருப்பது மகிழ்ச்சி. வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை இது எடுத்துரைக்கிறது. இந்தியாவின் மின்னிலக்கப் பொருளியலை இது மேம்படுத்தும். உலகளாவிய தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்கவும் உதவியாக இருக்கும்,” எனக் கூறியுள்ளார்.