புதுடெல்லி: ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இணையவாசிகள் தங்கள் மின்னஞ்சல், கைப்பேசி எண்களைக் கொடுத்து சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க முடியும்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் போலியாகக் கணக்கு தொடங்கி மோசடி செயல்களில் ஈடுபடும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இனி ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கணக்குகளைத் தொடங்க ‘கேஒய்சி’ (KYC - Know Your Customer) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால், வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது சிம் அட்டை வாங்குவது போலவே, இணையவாசிகள் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பித்த பின்னரே சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்க முடியும்.
இது குறித்து இந்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளையில், பயனர்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் விதமாக இந்த நடவடிக்கை அமையும் என்று எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

