சென்னை: ஊதிய உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் இன்று நடைப்பயணம் செல்ல இருக்கின்றனர்.
அரசு மருத்துவர்கள் காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்களின் சட்ட போராட்டக் குழுவினர், சேலம் மேட்டூரிலிருந்து சென்னை வரை, இன்று முதல் (11.06.2025) நடைப்பயணம் செல்கின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் திமுக அரசு, மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுக்கிறது.
“மருத்துவமனைகளில் போதியளவு மருத்துவர், தாதி பணியிடங்களை நிரப்பவேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் மேற்கொள்ளும் நடைப்பயணத்திற்கு, நாத கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும்,” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் தன்னுடைய அறிக்கையில், “கொரோனா பேரிடர் காலத்தில், பணியாற்றி உயிரிழந்த, அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதியின்படி, அரசு வேலையும் நிவாரணமும் வழங்க வேண்டும்.
தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக, வழங்கப்படாமல் இருக்கும், ஊதிய அமைப்பை வழங்க வேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முழு ஆதரவு தெரிவிக்கிறது,
தமிழக அரசு, உடனே போராட்டத்தில் ஈடுபட உள்ள, அரசு மருத்துவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், சுமுக தீர்வு காணவேண்டும்,” என்று அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.