புதுடெல்லி: நாட்டில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காண வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் குடிமக்கள் தாமாக வெளியேற 48 மணி நேர கெடு விதித்தது இந்திய அரசு.
இதுதொடர்பாக மாநில முதல்வர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் அப்போது பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்து அனைவரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், ‘சார்க்’ உறுப்பு நாடு என்ற அடிப்படையில், பாகிஸ்தான் குடிமக்கள் இந்தியாவுக்கு வர இனி விசா வழங்கப்படாது என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
எனினும், மருத்துவச் சிகிச்சைக்காக விசா பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் வரும் 29ஆம் தேதி வரை இந்தியாவில் நாட்டில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடந்த பைசரன் புல்வெளியைத் திறக்க அனுமதி இல்லை என்றும் காவல்துறையின் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் புல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

