திருப்பதி: 1,332 கோடி ரூபாய் செலவில் திருப்பதி - காட்பாடி இரட்டை ரயில் பாதை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி-காட்பாடி வழித்தடத்தில் 104 கி.மீ நீள ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த இரட்டை ரயில் பாதை திட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவிலையும் காளஹஸ்தி சிவன் கோயிலையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு 1,332 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. அதிகாரபூர்வ ரயில்வே தரவுகளின்படி, இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் 3வது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் 23 முக்கிய ரயில்வே உள்கட்டமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும்.
இந்தத் திட்டம் மொத்தம் 86,507 கோடி ரூபாய் முதலீட்டில் 2,869 கி.மீ ரயில் பாதைகளை உள்ளடக்கியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை ரயில்பாதை திட்டம் குறித்து பேசியுள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “வேலூர், திருப்பதி ஆகிய ஊர்களில் உள்ள கல்வி மற்றும் மருத்துவ மையங்களுடன் இணைப்பை மேம்படுத்துவதே இந்தப் புதிய திட்டத்தின் நோக்கம்,” எனக் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் நிலக்கரி, விவசாயப் பொருட்கள், சிமென்ட் மற்றும் பிற கனிமங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கு இது ஒரு அத்தியாவசிய பாதையாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது திருப்பதி - காட்பாடி திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அசின் இந்த அறிவிப்பால் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.