புதுடெல்லி: அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை மத்திய அரசு 50 விழுக்காடு அளவுக்கு உயர்த்தி உள்ளதாக தினமணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமருக்கு தாம் கடிதம் எழுதி உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரும் கொரடாவுமான மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அதில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அண்மையில் ஆஸ்துமா, காச நோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட எட்டு விதமான மருந்துகளின் விலையை உயர்த்தி இருப்பதாகவும் இதுதொடர்பாக தமது கவலையைத் தெரிவிக்க விரும்புவதாகவும் மாணிக்கம் தாக்கூர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அசாதாரண சூழ்நிலை, பொது நலன்கள் கருதி மத்திய அரசு இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக தாம் புரிந்துகொள்வதாகவும் எனினும் இத்தகைய முடிவின் பின்னணியில் உள்ள நியாயமான காரணத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
விலை உயர்த்தப்பட்ட எட்டு நோய்களுக்கான மருந்துகளை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்துவதாகவும் திடீர் விலை உயர்வு நோயாளிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் மாணிக்கம் தாக்கூர் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
“இதுபோன்ற முடிவெடுக்கும் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்து பொது மக்களின் நம்பிக்கையேப் பேணுவது இன்றியமையாதது.
“ஒரு முழுமையான மறு ஆய்வின் மூலம் அத்தியாவசிய மருந்துகள் மலிவு விலையில் கிடைத்து வருவதை உறுதி செய்ய முடியும்,” என்றும் மாணிக்கம் தாக்கூர் மேலும் கூறியுள்ளார்.

