புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலைச் சந்தித்தது. இதில் 22 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. இதனால் டெல்லியில் பத்து ஆண்டுகால ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில முதல்வராகப் பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி இதை மறுத்தது.
அதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மகாஸ் விகாஸ் கூட்டணியில் உள்ள சரத் பவார், பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவைப் பாராட்டிப் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்தான் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆதித்ய தாக்கரே வியாழக்கிழமை (பிப்ரவரி 13) ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஆதித்யா தாக்கரே, “அரசுகள் வரும் போகும். ஆனால் உறவுகள் தொடரும். நட்பு என்ற அடிப்படையில் நாங்கள் கெஜ்ரிவாலைச் சந்தித்தோம். நம்முடைய ஜனநாயகம் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை. அதேபோல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் இல்லை,” என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்தார்.
ஆதித்ய தாக்கரே உடன் சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் கெஜ்ரிவால் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது டெல்லி தேர்தல் மற்றும் இண்டியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து ராகுல் காந்தியையும் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார்.