புதுடெல்லி: அதிபரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என இந்திய சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்காடப்படும் வழக்குகளை அம்மாநில மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மாநில மொழிகளிலேயே விசாரிக்கப்பட வேண்டும். அந்த மொழியிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அண்மைக் காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்திலும் அலுவல் மொழியாக மாநில மொழியான தமிழை அங்கீகரிக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய சட்ட அமைச்சு மேற்கூறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே, தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் முறையே தமிழ், குஜராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் அவை ஏற்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, சட்டம், நீதித்துறை அமைச்சின்கீழ் இந்திய மொழிகள் குழுவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றட்ஹ் தலைமை நீதிபதி திரு எஸ் ஏ பாப்டே தலைமையில் இந்திய வழக்கறிஞர் சங்கம் அமைத்தது.
சட்டம் தொடர்பான அம்சங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கும் நோக்கில் சொற்களஞ்சியத்தை இக்குழு உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் 348(1)(ஏ) பிரிவு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. 348வது சட்டப்பிரிவின் 2வது பிரிவின் உட்பிரிவு (ஏ) பிரிவு (1)ல், உயர்நீதி மன்றங்களின் நடவடிக்கைகள் அதிபரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.