சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது ‘குண்டாஸ்’ போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு கொட்டினால் அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநர் ரவி வெள்ளிக்கிழமை (ஜூன் 13) ஒப்புதல் வழங்கி உள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகத்தில் உயிர்மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறைத் தண்டனை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார்.
மசோதாவில், “அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் உயிர்மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. உயிர்மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
“கள்ளச் சாராயம், சைபர் கிரைம், மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே முன்பு தடுப்புக் காவல் அளிக்கப்பட்டது. இனிமேல், உயிர்மருத்துவக் கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்படும்.
“இந்த மசோதாவின்படி, தமிழகத்தில் உயிர்மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிர்மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதி, விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய, தளவாய் சுந்தரம் (அதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் இதில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். என்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதை எழுத்துபூர்வமாக தருமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார். அதன்படி திருத்தங்கள் கொடுக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த மசோதா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், இது ஆளுநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.