அகமதாபாத்: குஜராத்தில் 1,500 தூண்களுடன் கூடிய, பிரம்மாண்டமான கோவிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் கோவிலுக்கான அடித்தளம் அமைத்து, பிரபல அதானி குழுமம் சாதனை படைத்துள்ளது.
உலகிலேயே மிக உயரமான கோவில் என்று பெயர் வாங்கவுள்ள இந்தக் கோவில், தரையில் இருந்து ஏறக்குறைய 504 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
அகமதாபாத் நகரில், ஜகத் ஜனனி மா உமியா என்ற பெயரில் கட்டப்பட்டு வரும் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகளில் அதானி நிறுவனத்தின் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
1,500 தூண்களைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்தக் கோவிலின் அடித்தளம் அமைக்கும் பணி கடந்த மூன்று நாள்களாக இரவு, பகல் பாராமல் தொடர்ந்து 72 மணிநேரம் நடந்தது. 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
அதன் முடிவில், 450 அடி நீளம், 400 அடி அகலம், 8 அடி ஆழம் என்ற கணக்கில் மிகச்சிறந்த முறையில் அடித்தளம் அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பின் வெப்ப அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம், தங்க சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என அதானி குழும சிமென்ட் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் பஹேட்டி உறுதிபடுத்தியுள்ளார்.