ஊருக்கே விபத்துக் காப்புறுதி எடுத்து வியக்கவைத்த மணமகன் குடும்பத்தார்

ஊருக்கே விபத்துக் காப்புறுதி எடுத்து வியக்கவைத்த மணமகன் குடும்பத்தார்

1 mins read
fcc068ba-9158-4fbc-90eb-faad4b989a14
மணமகன் வீட்டார் தம் ஊரைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,500 பேருக்கும் விபத்துக் காப்புறுதி எடுத்துக்கொடுத்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். - படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

நாண்டெட்: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாண்டெட் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், வாழ்க்கையில் இருவர் இணையும் ஒரு தனிப்பட்ட கொண்டாட்டமாக மட்டுமன்றி ஊருக்கே நெகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

ஒட்டுமொத்த கிராமத்தினர்க்கும் மணமகன் வீட்டார் விபத்துக் காப்புறுதி எடுத்துக் கொடுத்து, அதிசயிக்கத்தக்க சமூகநல நிகழ்வாக அதனை மாற்றினர்.

பகதூர்புரா எனும் சிற்றூரில் சித்தேஸ்வர் பெத்கர் - மஞ்சுஷா திருமண நிகழ்வில் அந்த அதிசயம் அரங்கேறியது.

பகதூர்புரத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 3,500 பேர்க்கும் மணமகன் குடும்பத்தினர் காப்புறுதி எடுத்தனர். ஊக்கமளிக்கும் அந்த முயற்சி, ஏதேனும் விபத்து நேரிட்டால் கிராம மக்களுக்கு நிதி ஆதரவை உறுதிசெய்கிறது.

“திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நினைவுப் பரிசாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு விபத்துக் காப்புறுதி வழங்கிய அந்தச் செயல் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது,” என்று சிவசேனா கட்சி எம்.பி. மிலிந்த் தியோரா தெரிவித்துள்ளார்.

ஆடம்பரத்தைவிடக் கருணையைத் தேர்ந்தெடுத்த அதுபோன்ற சிந்தனைமிக்க இளைய இந்தியர்களுக்கு தமது வாழ்த்துகளையும் அவர் கூறிக்கொண்டார்.

அந்தச் செயல் சமூக ஊடகங்களிலும் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

“அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு குடிமகன் செய்துள்ளார். சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஒவ்வொரு செயலும் செய்யப்படும் இந்த ‘ரீல்ஸ்’ காலத்தில், ‘எங்கள் பண்பாட்டில் அறச்செயல்கள் தம்பட்டம் அடிக்கப்படுவதில்லை’ என்று மணமகன் மெய்ப்பித்துள்ளார்,” என்று எக்ஸ் தளப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு திருமணங்கள் தேவைப்படுவதைக் கற்பனை செய்துபாருங்கள்,” என்று இன்னொரு பயனர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்