புதுடெல்லி: இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு, சேவை வரி குறைக்கப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு சரிக்கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதிய ஈரடுக்கு வரிமுறை நடப்புக்கு வருகிறது.
ஆனால், இந்தச் சீர்திருத்தத்தை மேற்கொள்ளுமாறு பத்தாண்டு காலமாகத் தமது கட்சி வலியுறுத்தி வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.
“மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்பதை ஒரு நாடு 9 வரிகள் என மாற்றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்றும் 0.25%, 1.5%, 3% மற்றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்களும் அடங்கும்.
“2019 மற்றும் 2024 தேர்தல் அறிக்கையில் எளிமையான ஜிஎஸ்டி முறையை காங்கிரஸ் கோரியிருந்தது.
“மொத்த ஜிஎஸ்டியில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பைகளில் இருந்து வருகிறது. ஆனால், கோடீஸ்வரர்களிடமிருந்து 3% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
“அதேநேரம், அவர்களுக்குச் சாதகமாக கார்ப்பரேட் வரி 30%லிருந்து 22ஆக குறைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“எட்டு ஆண்டுகளாக தூக்கத்தில் இருந்த மோடி அரசு தற்போது விழித்துக்கொண்டு ஜிஎஸ்டியை மறுசீரமைத்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். அதேநேரம், ஜிஎஸ்டி குறைப்பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு அந்த இழப்பை மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார் மல்லிகார்ஜுன கார்கே.