புதுடெல்லி: இந்தியாவில் ‘ஜிஎஸ்டி’ எனப்படும் சரக்கு, சேவை வரியில் அண்மையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, 5 மற்றும் 18 விழுக்காடு என இரண்டடுக்கு வரி விகிதங்கள் அமலுக்கு வரவுள்ளன.
செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அச்சீர்த்திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதையடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலையைக் குறைத்து உள்ளன.
அந்த வகையில், சிறிய கார்களுக்கான ஜிஎஸ்டி., வரி, 28ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பெரிய ஆடம்பரக் கார்களுக்கான வரி, 28ல் இருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், தங்கள் கார்களுக்கான விலையை, 1.40 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது.
‘மஹிந்திரா அண்டு மஹிந்திரா’ நிறுவனம், கார்களுக்கான விலையை, 1.56 லட்சம் ரூபாய் வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோன்று ‘ரெனால்ட் இந்தியா’ நிறுவனமும் ‘மாருதி சுசூகி’ நிறுவனமும் கார்களின் விலையைக் குறைக்க முடிவுசெய்துள்ளன.
இதேபோன்று மற்ற சில நிறுவனங்களும் ஜிஎஸ்டி சீரமைப்பைப் பின்பற்றி வரிகளைக் குறைத்து கார்களின் விலையையும் குறைக்கும் என்பதால், இந்தியாவில் கார் விற்பனை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.