அகமதாபாத்: இந்தியா முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட மூத்த பத்திரிகையாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகேஷ் லங்கா எனப்படும் அந்தப் பத்திரிகையாளர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
போலியான ஆவணங்களைத் தயாரித்து உருவாக்கப்படும் நிறுவனங்களைக் கண்டுபிடிக்க ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய நபர்களைப் பிடிக்க மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் பெரிய அளவிலான முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஒரே பான் (PAN) எண்ணைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 200 போலி நிறுவனங்கள் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன.
இந்த நிறுவனங்கள் போலி உள்ளிட்ட வரி கடன் பெறுவது மற்றும் வழங்குவது போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஜராத்தின் அகமதாபாத், சூரத் உள்ளிட்ட 14 இடங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அகமதாபாத்தில் மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா மனைவியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது போலி நிறுவனங்கள் அனைத்தையும் தனது கணவரே நிர்வகிப்பதாகவும் தனக்கும் அந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் சில நில ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.