கோடைக்கால பரிசுச்சீட்டு அதிர்ஷ்டக் குலுக்கலில் முதல் பரிசு பெற்றவரை அடையாளம் கண்டுவிட்டது இந்தியாவின் கேரள மாநில அதிர்ஷ்டக் குலுக்கல் பிரிவு.
பத்துக் கோடி ரூபாய் (S$1.62 மில்லியன்) பரிசு விழுந்த அந்த அதிர்ஷ்டசாலி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் டிகா.
‘ஒரு முத்தாசி கதா’ மலையாளத் திரைப்படப் புகழ் நடிகை ரஜினி சாண்டியின் வீட்டில் டிகா வேலைசெய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிகா கொச்சியில் உள்ள வங்கி ஒன்றில் பரிசுச்சீட்டைக் கொடுத்து, தேவையான நடைமுறைகளை முடித்துவிட்டார்.
“டிகா என் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்த நல்ல செய்தியை கேரள அதிர்ஷ்டக் குலுக்கல் பிரிவு நேற்று முன்தினம்தான் (மார்ச் 19) தெரிவித்தது,” என்று ரஜினி சொன்னார்.
டிகா 250 ரூபாய் கொடுத்து அந்தப் பரிசுச்சீட்டை வாங்கினார். வரிகள் கழிக்கப்பட்ட பிறகு அவருக்கு ஆறரைக் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைக்கும் எனக் கூறப்பட்டது.