கோவா: விமானப் பயணத்தின்போது அறிமுகமான பெண்ணுடன் நட்புடன் பழகி, விமானம் தரையிறங்கியதும் சொகுசுவிடுதியில் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஆடவரை இந்தியாவின் கோவா மாநிலக் காவல்துறை கைதுசெய்தது.
இம்மாதம் 23ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
கோவாவிற்குச் சுற்றுலா சென்ற அப்பெண், தமக்கு நேர்ந்த கொடுமை குறித்துக் காவல்துறையிடம் புகாரளித்தார்.
அதனைத் தொடர்ந்து, லட்சுமண் ஷியர் என்ற 47 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அவரும் கோவாவிற்குச் சுற்றுப்பயணமாகச் சென்றதாகக் கூறப்பட்டது.
“விமானப் பயணத்தின்போது இருவரும் நண்பர்களாயினர். அப்போது, அப்பெண்ணின் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்ட லட்சுமண், பின்னர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார்,” என்று காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஜிவ்பா தால்வி கூறினார்.
“இந்நிலையில், இவ்வாரத் தொடக்கத்தில் இருவரும் தனித்தனியாக கோவா சென்றனர். ஆகஸ்ட் 23ஆம் தேதி, அப்பெண்ணிடம் எப்படியோ பேசி மயக்கி, அவரைத் தான் தங்கியிருந்த சொகுசுவிடுதிக்கு வரவழைத்தார் லட்சுமண்,” என்று திரு தால்வி விளக்கினார்.
அப்பெண் தனியாக அந்தச் சொகுசுவிடுதிக்கு வந்ததும் அவரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்ற லட்சுமண், அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அத்துடன், நடந்ததை வெளியில் சொன்னால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அப்பெண்ணை அவர் மிரட்டியதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, லட்சுமணைக் காவல்துறை கைதுசெய்தது. பாதிக்கப்பட்ட பெண் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.