ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஒரே காவல்நிலையத்தில் குரு - சிஷ்யை இணைந்து பணியாற்றி வருவது தொடர்பான காணொளி ஆந்திரா முழுவதும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டம், சவுத்ரிகூடா கிராமத்தைச் சேர்ந்தவர் லால்யா நாயக். எம்.ஏ., பி.எட் படித்துள்ள இவர், விகாராபாத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
அப்போது அந்தக் கல்லூரியில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஜபீனா பேகம் என்ற மாணவி படிப்பதற்காகச் சேர்ந்தார். அவருக்கான கல்விக் கட்டணத்தை லால்யா நாயக் தனது ஊதியத்தில் இருந்து கட்டினார்.
ஜபீனா பேகத்தை நன்கு ஊக்கமளித்து படிக்க வைத்தார் லால்யா நாயக்.
இந்தச் சூழலில், ஜபீனாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயற்சி செய்த போது, அதனை தடுத்து நிறுத்தி ஜபீனாவைத் தொடர்ந்து லால்யா நாயக் படிக்க வைத்தார்.
இதனிடையே கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்ததால், பேராசிரியர் வேலையை இழந்த லால்யா நாயக் அதன்பிறகு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
தற்போது அவர் மொய்னாபாத் காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பட்டப்படிப்பை முடித்த ஜபீனா பேகம் 2024ல் காவல் ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்வில் தேர்ச்சி பெற்று, ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு மொய்னாபாத் காவல் நிலையத்தில் பணி நியமனம் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
முதல் நாள் எஸ்ஐ சீருடையில் வந்த ஜபீனா பேகத்தைப் பார்த்து லால்யா நாயக் இன்ப அதிர்ச்சி அடைந்தார். எனினும், ‘சல்யூட்’ அடித்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றார் லால்யா.
பிறகு அவருடன் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார்.
ஜபீனா பேகமும் தனது ஆசிரியர் லால்யா நாயக்கை பார்த்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார்.
தான் படிப்பு சொல்லிக்கொடுத்து, படிக்க வைத்த ஒரு பெண், தனக்கு அதிகாரியாக வந்ததைப் பெருமையாகக் கருதுவதாக லால்யா நாயக் கூறினார்.