ருத்ரபிரயாக்: பழுதுபார்க்கக் கொண்டு செல்லப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று வானில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
உத்தராகண்டில் இந்தச் சம்பவம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலையில் நிகழ்ந்தது.
கிரிஸ்டல் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர் பழுதடைந்ததால் கேதார்நாத்திலிருந்து கௌச்சார் விமான நிலையத்திற்கு எம்ஐ-17 ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், பறந்து சிறிது தூரம் சென்றவுடன் ஹெலிகாப்டரின் எடை மற்றும் பலத்த காற்று காரணமாக எம்ஐ-17 ஹெலிகாப்டர் நடுவானில் தடுமாறியது.
அதனைத் தொடர்ந்து பழுதடைந்த ஹெலிகாப்டர் எம்ஐ-17 ஹெலிகாப்டரின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மண்டாகினி ஆற்றில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
இருப்பினும், கீழே விழுந்த ஹெலிகாப்டரில் பயணிகளோ பொருள்களோ இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.