புதுடெல்லி: இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையடுத்து டெல்லியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்துக்கான இறக்குமதி வரி 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை (மே 23) இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைத்துப் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இருந்து வந்த இரு பயணிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. தாய்லாந்து குடிமக்களான இருவரையும் தனியே அழைத்துச் சென்று விசாரித்தபோது ரூ.48 கோடி மதிப்புள்ள ‘ஹைட்ரோஃபோனிக்’ என்ற உயர் கஞ்சாவை இருவரும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
உடனடியாக கடத்தல் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹைட்ரோஃபோனிக் என்பது மண்ணுக்குப் பதிலாக, ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் வளர்க்கப்படும் வீரியம் மிக்க ஒருவகை கஞ்சா ஆகும்.
முதல் பயணியிடம் இருந்து 29 கிலோ எடையுள்ள நான்கு உறைகளும் மற்றொரு பயணியின் பையில் இருந்து சுமார் 19 கிலோ எடையுள்ள இரண்டு உறைகளும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது என டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

