புதுடெல்லி: அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இது உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி, நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் இந்தியாவின் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன, பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதற்கிடையே, அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.
“அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுக்கிறோம். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை, ஆதாரமற்றவை”, என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை நிலைமை
புதிய அறிக்கையால் திங்கட்கிழமை அன்று இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது.
இந்தியாவில் செயல்படும் பெரும் நிறுவனங்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பணியிலுள்ள ஒழுங்குமுறை அமைப்பின் தலைவரே முறைகேட்டில் ஈடுபடுவதா? என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, செபி தலைவர் மாதபி புச் மற்றும் தவல் புச் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
“எங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறோம். அதில் எந்த உண்மையும் இல்லை. எங்களது வாழ்க்கையும் நிதி நிர்வாகமும் ஒரு திறந்த புத்தகம் போன்றது. தேவையான அனைத்து வெளிப்பாடுகளும் ஏற்கெனவே செபி-க்கு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. எந்தவொரு நிதி ஆவணங்களையும் வெளியிடுவதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளனர்.

