லூதியானா: ஒரே நாளில் 72 கிலோ பால் கொடுத்து இந்திய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது ‘ஹோல்ஸ்டீன் ஃபிரீசியன்’ இனத்தைச் சேர்ந்த ஒரு பசு.
அரியானா மாநிலம், குருஷேத்திரம் நகரில் போரஸ் மெஹ்லா, சாம்ராட் சிங் என்ற இருவர் வளர்த்துவரும் அந்தப் பசுவிற்கு இப்போது ஏழு வயதாகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், ஜக்ரோனில் ஞாயிற்றுக்கிழமையன்று (05-02-2023) வருடாந்திர அனைத்துலக பால், வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
அதில் இடம்பெற்ற பால்கறப்புப் போட்டியில் போரஸ்-சாம்ராட்டின் பசு 24 மணி நேரத்தில் 72.390 கிலோ பால் கொடுத்தது. இந்தியாவில் இதற்குமுன் நடந்த எந்தப் போட்டியிலும் ‘ஹோல்ஸ்டீன்’ வகையைச் சேர்ந்த ஒரு பசு இவ்வளவு பால் கொடுத்ததில்லை. ‘ஹோல்ஸ்டீன்’ இன பசுக்களைப் பொறுத்தமட்டில், கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியில் ஒரே நாளில் 70.4 கிலோ பால் கொடுத்திருந்ததே முன்னைய சாதனை.
பால்கறப்புப் போட்டியில் போரஸ்-சாம்ராட்டின் பசு கலந்துகொண்டது இதுவே முதன்முறை. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 30 ‘ஹோல்ஸ்டீன்’ பசுக்கள் போட்டியில் பங்கேற்றன.
தங்களது மாடு போட்டியில் முதலிடம் பிடித்ததால், ‘டிராக்டர்’ ஒன்றைப் பரிசாகப் பெறவுள்ளனர் போரஸ்-சாம்ராட்.
இவர்களில் 40 வயதான போரஸ் ‘எம்பிஏ’ படித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா