இரு சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு - இருவருக்கு ஆயுள் தண்டனை

இரு சகோதரிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு - இருவருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
61b7c644-af97-4d61-a282-e7bea4e4cc5c
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் இரண்டு தலித் சகோதரிகள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

லக்கிம்பூர் கேரி: உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் தலித் சகோதரிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் இருவருக்குப் போக்சோ நீதிமன்றம் திங்கட்கிழமை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டுச் செப்டம்பர் 14 ஆம் தேதி நிகாசன் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட இரு சகோதரிகளை ஆறுபேர் கொண்ட கும்பல் கடத்தியது. அவர்களை அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொடூரமாகக் கொலை செய்தது.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட ஆறு பேரை காவல்துறை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தது. அந்த ஆறு பேரில் இருவர் 18 வயதுகுட்பட்டவர்கள் எனக் காவல்துறை கண்டறிந்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், போக்சோ நீதிமன்றத்தின் நீதிபதி திங்கட்கிழமை அளித்த தீர்ப்பில் ‘‘நிகாசனில் உள்ள ஒரு கிராமத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 16 வயதுக்குட்பட்ட இரு சகோதரிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் ரூ.46,000 (S$750) அபராதமும் விதிக்கப்படுகிறது”.

மேலும் அந்தத் தீர்ப்பில்,”மற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சாட்சிகளைக் கலைக்க முற்பட்டதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 (S$100) அபராதமும் விதிக்கப்படுகிறது,’’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்ற இரு குற்றவாளிகளில் ஒருவரின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. ஆறாவது குற்றவாளி மீதான வழக்கு விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகப் போக்சோ நீதிமன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்