டெல்லி: டெல்லியில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய அமலாக்கச் சோதனையில் பங்ளாதேஷில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியதாக 175 பேர் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
டெல்லியின் பல பகுதிகளிலும் பங்ளாதேஷைச் சேர்ந்த பலர் எந்த ஆவணமும் இன்றி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அமலாக்கச் சோதனையில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியது.
டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா உத்தரவின்கீழ் இச்சோதனை நடந்தது.
டெல்லி காவல்துறை அதிகாரிகளுடன் வெளிநாட்டுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து கொண்டு பல இடங்களிலும் வீடு வீடாகச் சென்று சோதனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
சந்தேக நபர்கள் சிலர் இந்தியக் கிராமங்கள் சிலவற்றை தங்களது சொந்த ஊர் என்று கூறியுள்ளனர். அதனால் அவ்விடங்களுக்குச் சிறப்புக் குழுக்களை அனுப்பியும், உள்ளூர் காவல்துறையினர் உதவியுடனும் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
இதில் கிடைக்கும் தகவல் அடிப்படையில் சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சந்தேக நபர்கள் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தால், அவர்களை மீண்டும் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.