மூன்று மாநிலங்களில் கனமழை பொழியலாம்; சிவப்பு எச்சரிக்கை

மூன்று மாநிலங்களில் கனமழை பொழியலாம்; சிவப்பு எச்சரிக்கை

2 mins read
3da6ddea-2ea7-4bfa-b821-5f5e62b1f83d
கடந்த ஜூலை மாதம் கனமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தா. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடி‌சா மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 15) கடும் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்திய வானிலை நிலையம் (IMD) அம்மாநிலங்களுக்கு சிவப்பு நிற வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, பீகார் ஆகியவற்றுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளும் கனமழைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் லேசான மழையாவது பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் கங்கை ஆற்றுக்கு அருகே உள்ள பகுதிகள் சிலவற்றில் கனமழை அல்லது மோசமான கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமையன்றும் (செப்டம்பர் 16) சில இடங்களில் கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை நிலையம், தனது வானிலைச் செய்திகளில் இத்தகவல்களை வெளியிட்டது.

ஒடி‌சா, ஜார்க்கண்ட் ஆகியவற்றிலும் பெரும்பாலான இடங்களில் லேசான மழையாவது பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிலையம் கணித்துள்ளது. சில இடங்களில் கடும் கனமழையும் பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒடி‌சா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் செவ்வாய்க்கிழமையும் (செப்ட்ம்பர் 17) மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் மிதமான மழை பொழியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரத்தைக் கருத்தில்கொண்டு திங்கட்கிழமை வரை வங்கக் கடலின் வடக்குப் பகுதிக்குள் செல்லவேண்டாம் என்று வானிலை நிலையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பயணம் செய்யும்போது முன்பு நீர் தேங்கிய பகுதிகளைத் தவிர்க்குமாறும் போக்குவரத்து நெரிசல் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, மிசோரம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு வானிலை நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது. ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு கனமழை பெய்யலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்