நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கைக் கடற்கொள்ளையர் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் 26ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மீனவர்களைத் தாக்கி உடைமைகளைக் கொள்ளையடித்தபோது ஏற்பட்ட மோதலில் இலங்கையைச் சேர்ந்த மூன்று கடற்கொள்ளையர்களில் ஒருவரை மீனவர்கள் சிறைபிடித்தனர். மற்ற இருவரும் படகில் ஏறித் தப்பினர்.
பிடிபட்டவர் இலங்கைக் காங்கேசன்துறையைச் சேர்ந்த அயந்தன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கீழையூர்க் காவல்துறையிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோரக் பாதுகாப்புக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், பிடிபட்ட கொள்ளையரின் உண்மையான பெயர் அஜந்தன் என்பதும் இலங்கை பலாலியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழக மீனவர்கள் மீதான பல தாக்குதலுக்கு அஜந்தனும் அவரது சகோதரர்கள், சகோதரியின் மகன்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அவர்கள் தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்களைத் தாக்கிக் கொள்ளையடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களின் இச்செயல் இருநாடுகளிடையே நிலவும் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

