சென்னை: விமான நிலையங்களில் பயணப்பைகளை மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணப் பெட்டிகளில் பயணிகள் வண்ண நாடாக்கள் கட்டுமாறு விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில், ‘கன்வேயர் பெல்ட்’களில் வரும் பயணப் பெட்டிகளைப் பயணிகள் தவறுதலாக மாற்றி எடுத்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
ஒரே மாதிரியான வடிவம் மற்றும் நிறங்களில் பயணப் பெட்டிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இந்தக் குழப்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
விமான நிறுவனங்கள், ஒவ்வொரு பயணப் பெட்டிகளுக்கும் அடையாள ஒட்டுவில்லை வழங்கி, அதற்கான எண்ணைப் பயணிகளின் பயண அட்டையிலும் ஒட்டுகின்றன.
இருந்தாலும், பயண களைப்பு, அவசரம் காரணமாக பலர் ஒட்டுவில்லை எண்களைச் சரிபார்க்காமல் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர். இதனால், பயணிகள் இடையே வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக, இந்திய விமான நிலைய ஆணையம், பயணிகள் தங்கள் பயணப் பெட்டிகளின் கைப்பிடி அல்லது மேற்பகுதியில் வண்ணமயமான நாடாக்கள், ஸ்டிக்கர்கள் அல்லது தனித்துவ அடையாளங்களை பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், ‘கன்வேயர் பெல்ட்டில்’ வரும் உடைமைகளை எளிதில் அடையாளம் காண முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், சென்னை விமான நிலையத்தில் ‘கன்வேயர் பெல்ட்’களை சுற்றி ‘டிராலிகள்’ உடன் மக்கள் கூட்டமாக நிற்பது என்பது மற்றொரு சிக்கலாக உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனால், சில பயணிகள் தங்கள் உடைமைகளை எடுக்க முடியாமல், அவை மீண்டும் பெல்ட்டை சுற்றி வரக் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது.
எனவே, வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளது போல், பயணிகள் ‘கன்வேயர் பெல்ட்’டிலிருந்து சிறிது தூரத்தில் காத்திருந்து, தங்கள் பெட்டிகள் வந்தபின் மட்டும் முன்னேறி சென்று எடுக்கும் ஒழுங்குமுறையை சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அமல்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

