சண்டிகர்: டெல்லியை ஒட்டியுள்ள வடமாநிலங்களில் கருக்கலைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹரியானாவில் உள்ள பல கிராமங்களில் பாலின விகிதாச்சார இடைவெளியும் அதிகரித்துள்ளது.
அக்கிராமங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே உள்ளதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய 481 கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதாகவும் கடந்த ஐந்தாண்டுகளில் பிறப்பு விகிதத்தை ஆய்வு செய்தபோது குறைவான பெண் குழந்தைகள் பிறப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவில் மொத்தம் 6,842 கிராமங்கள் உள்ளன. இவற்றுள் பல கிராமங்கள் அம்பாலா, யமுனாநகர், பஞ்ச்குலா, பிவானி, மஹேந்தகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன.
அக்கிராமங்களில் பாலின விகிதாச்சார இடைவெளி கணிசமாக அதிகரித்துள்ளது. இம்மாவட்டங்கள் அனைத்துமே அண்டை மாநிலங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசத்தின் எல்லைகளையொட்டி அமைந்துள்ளன.
ஹரியானா பெண்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து கருக்கலைப்புச் செய்துவிடுவதாகக் கூறப்படுகிறது.