ராமேசுவரம் / முதுமலை: இந்திய-இலங்கை எல்லைப்பகுதியின் அருகே அரிச்சல்முனையில் வெள்ளிக்கிழமை அன்று இந்திய கடலோரக் காவல் படை சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறப்பு அணிவகுப்பை நடத்தியிருக்கிறது.
ஃஹோவர் கிராப்ட் சுற்றுக் காவல் படகில், தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் கடலோரக் காவல் படை வீரர்கள் சுற்றி வந்தனர். இதையடுத்து அரிச்சல்முனை கடற்கரையில் கொடியேற்று விழா நடைபெற்றது.
கடலோரக் காவல் படையினர், தனுஷ்கோடி கடற்பகுதியில் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு நீச்சல் அடித்தனர்.
அதேபோல, பாம்பன் பாலத்தில் தேசியக் கொடியுடன் இந்திய கடலோரக் காவல் படையினர் அணிவகுத்து சென்றனர்.
அதே சமயத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திர தினத்தையொட்டி யானைகள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. தெப்பக்காடு யானைகள் முகாமில் 20க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன.
இங்கு வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. யானைகள் அணிவகுத்து நிற்க, அவற்றின் மீது தேசியக் கொடியை ஏந்தியவாறு பாகன்கள் அமர்ந்திருந்தனர். புலிகள் காப்பக இணை இயக்குநர் வித்யா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அந்த சமயம், வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி பிளிறியபடி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தின. யானைகளின் பிளிறல் அங்கு கூடியிருந்த சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியப்பட வைத்தது. அனைத்து யானைகளுக்கும், கரும்பு, வெல்லம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன.
குன்னூரில் 79வது சுதந்திர தின விழாவையொட்டி, உயிர்நீத்த ராணுவ வீரர்களின் போர் நினைவுச் சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

