உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ‘ஆகாஷ்’ ஏவுகணைகள்

2 mins read
77b6fb7a-3853-4967-a720-69b1df7eeffc
ஆகாஷ் ஏவுகணைகளை டிஆர்​டிஓ மற்​றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்​கள் இணைந்து தயாரித்​தன. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில் ஆளில்லா வானூர்திகள் (டிரோன்கள்), ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவிய போது அவை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.

இந்த ஆகாஷ் ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஒ) விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமாராவ்தான் உருவாக்கி உள்ளார்.

இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று புகழப்படும் டாக்டர் அப்துல் கலாம்தான், ஆகாஷ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநராக டாக்டர் பிரகலாத் ராமாராவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஆகாஷ் திட்டத்தில் மிகக் குறைந்த வயதுள்ள இயக்குநராக பிரகலாத் பணியாற்றினார்.

இதுகுறித்து விஞ்ஞானி பிரகலாத் கூறுகையில், “வான் வழியாக எதிரிகள் நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அதை உருவாக்குவதில் நானும் உதவியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது.

“பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகளை ஆகாஷ் தாக்கி அழித்த அந்த நாள்தான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆகாஷ் ஏவுகணை மிகவும் வேகமானது, ஆபத்தானது. பாகிஸ்தானுடனான மோதலின் போது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அற்புதமாக ஆகாஷ் ஏவுகணை செயலாற்றி உள்ளது,” என்றார்.

மிக வேகமாக வரும் எதிரிகளின் டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், இன்னும் சொல்லப் போனால் எப்16 ரக போர் விமானங்களையும் கூட வானிலேயே இடைமறித்துத் தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணைகளை டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

இதுதான் இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. இந்த ஏவுகணையை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். மிக வேகமானது, பயங்கரமானது. 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. ஆகாஷ் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏவுகணைகளை வாங்க அர்மீனியா ஆர்டர் வழங்கி உள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. பயன்படுத்துவது எளிமையானது, சிறந்த செயல்பாடு கொண்டது. இதனால் இந்த ஏவுகணைகளை வாங்க உலகளவில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்