ஜெர்மனியின் சஞ்சிகையான Der Spiegel இந்திய மக்கள்தொகை குறித்து அண்மையில் ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டது.
அந்த கேலிச் சித்திரம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்திய அமைச்சர்கள் உட்பட பலர் அந்த சித்திரம் இனவாதம் செய்யும் வகையிலும் ரசனையில்லாமலும் வரையப்பட்ட ஒன்று என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேலிச் சித்திரத்தில் இந்திய ரயில் ஒன்று பயணிகளால் நிரம்பி வழிகிறது, அதனால் பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு மேல் அமர்ந்திருக்கின்றனர். அந்த ரயில் சீன ரயில் ஒன்றை முந்திக்கொண்டு செல்வதுபோல் வரையப்பட்டிருந்தது.
மக்கள் தொகையில் இந்தியா சீனாவை விஞ்சப்போவதாக சில நாள்களாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதைக் குறிக்கும் நோக்கில் சஞ்சிகை சித்திரம் வெளியிட்டது.
சஞ்சிகை சிந்தனையில் பின்தங்கியுள்ளதாகவும் அது இந்தியாவின் முன்னேற்றத்தைப் பார்க்கத் தவறிவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 2014ஆம் ஆண்டு இந்தியாவின் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்த மங்கள்யான் செயற்கைக்கோள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதற்கு எதிர்ப்புகள் எழ பின்னர் அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.