புதுடெல்லி: உலகெங்கும் மில்லியன்கணக்கானோரைப் பாதித்துள்ள வெள்ளெழுத்துக் (பிரெஸ்பியோபியா) குறைபாட்டைக் களையும் சொட்டு மருந்திற்கு இந்திய மருந்துப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பொதுவாக 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோரைப் பாதிக்கும் இந்தக் குறைபாட்டுக்கு இனி கண்ணாடி அணியத் தேவையில்லை என்று கூறப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த ‘என்டோட்’ மருந்து நிறுவனம் ‘பிரெஸ்வியு’ எனும் கண்ணுக்கான சொட்டு மருந்தைத் தயாரித்துள்ளது.
உலகெங்கும் 1.09 பில்லியன் முதல் 1.80 பில்லியன் வரையிலானோர் வெள்ளெழுத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கண்ணாடி அணிதல், ஒட்டுவில்லை, அறுவை சிகிச்சை போன்றவையே இதற்குத் தீர்வாக அமைந்தன.
ஆனால் இதற்கு மாற்றுத் தீர்வாகக் கருதப்படும் புதிய சொட்டு மருந்து, 15 நிமிடங்களில் கண் பார்வையைச் சீராக்குகிறது. கூடுதல் நன்மையாக, கண்ணில் உராய்வைத் தடுக்கவும் இது உதவும்.
இந்தச் சொட்டு மருந்து நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்றது என்றும் தயாரிப்பு நிறுவனம் கூறியது.
இந்தச் சொட்டு மருந்தின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற அது விண்ணப்பித்துள்ளது.
வயது முதிர்ச்சியால் ஏற்படும் வெள்ளெழுத்துக் குறைபாட்டால் ஒருவர் அருகிலுள்ள பொருள்களைச் சரியாகக் காண இயலாது. இது ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

