புதுடெல்லி: காய்ச்சல், சளி, வலி, ஒவ்வாமை உள்ளிட்ட நோய்களுக்காகப் பரவலாக விற்கப்படும் 156 மருந்துகளுக்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.
அந்தக் கலவை மருந்துகளால் மனிதர்களுக்குத் தீங்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, அவை தடைசெய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்டுள்ள மருந்துகளில், முன்னணி மருந்து நிறுவனங்களான சிப்லா, டோரன்ட், சன் பார்மா, ஐபிசிஏ லேப்ஸ், லூபின் ஆகியவற்றின் தயாரிப்புகளும் அடங்கும்.
‘எஃப்டிசி’ எனப்படும் அந்த நிலையான மருந்தளவுக் கலவைகள், ஒரு மாத்திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை இணைக்கும் மருந்துகள் ‘காக்டெய்ல்’ மருந்துகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
உயர்மட்டக் குழு மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமும் (DTAB) இந்தக் கலவைகளை ஆய்வு செய்து, அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆகையால், பொதுநலன் கருதி, மருந்துகள், அழகுசாதனப் பொருள்கள் சட்டம் 1940 பிரிவு 26ஏயின்கீழ், அம்மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்தைத் தடை செய்வது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

