புதுடெல்லி: இந்தியாவில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்கள் அவதிப்படுவதாக ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமனி தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“மியன்மார், காஸா, இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதைக் கண்டும் காணாமல் இருப்பவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல,” என்று அயத்துல்லா காமனி செப்டம்பர் 16ஆம் தேதியன்று சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அயத்துல்லா காமனியின் கருத்துகள் தவறானவை என்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.
“இந்தியாவில் சிறுபான்மையினத்தவர்கள் நியாயமான வகையில் நடத்தப்படுவதில்லை என்று சில நாடுகள் குறைகூறுகின்றன. அந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினத்தவர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்று அவற்றின் தலைவர்கள் முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாகவே நெருக்கமான, வலுவான உறவு இருந்து வருகிறது.
ஈரானின் சபஹாரில் உள்ள துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா கடந்த மே மாதம் பத்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இருப்பினும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நியாயமான வகையில் நடத்தப்படுவதில்லை என்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் அயத்துல்லா காமனி இதற்கு முன்பு இஸ்தியாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வவைத்துள்ளார்.