புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் சமையல் எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் மதிப்பு 254 விழுக்காடு உயர்ந்து, 2.60 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அதே வேளையில், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு 57.5 விழுக்காடு குறைந்துள்ளது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அமெரிக்காவிடம் இருந்து 3.70 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், 2026-27 நிதியாண்டின் அதே காலாண்டில் இது 1.57 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
இந்தியச் சுத்திகரிப்பு ஆலைகளின் வணிக ரீதியான தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடையை எதிர்கொண்ட இந்தியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியை பெருமளவில் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருள்கள் இறக்குமதி 24 விழுக்காடு உயர்ந்து 16.65 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
ஆனால், இந்தியா அமெரிக்காவுக்குச் செய்த ஏற்றுமதி 25.46 பில்லியன் டாலராகப் பெரிய மாற்றமின்றித் தேக்கநிலையில் உள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியை நடப்பு நிதியாண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த மத்திய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.


