புதுடில்லி: ‘இன்டர்போல்’ எனப்படும் அனைத்துலக குற்ற விசாரணை அமைப்புடன் சேர்ந்து செயல்படும் வகையில் ‘பாரத்போல்’ இணையத்தளத்தை இந்திய அரசு தொடங்கி உள்ளது.
மத்திய புலனாய்வுப் பிரிவால் (சிபிஐ) உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தின் வாயிலாக, இண்டர்போலிடம் இருந்து தகவல்களை வேகமாகப் பெற முடியும்.
இந்தியாவின் விசாரணை அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் உதவியாக இருக்கும் வகையில் இந்த இணையத்தளத்தை டெல்லியில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு, குற்றவியல் தொடர்பான விஷயங்களில் அனைத்துலக புலனாய்வு முகவைகளுடன் இணைந்து செயல்படும்.
எல்லைகளைக் கடந்து இடம்பெறும் இணையவழி மோசடிகள், நிதி மோசடிகள், கடத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் அனைத்துலக அளவில் ஒத்துழைப்பை பெற்று குற்றவாளிகளை எளிதில் கண்டறிய ‘பாரத்போல்’ தளம் உதவிகரமாக இருக்கும்.
நாட்டின் அனைத்துலக அளவிலான விசாரணைகளில் புதிய அத்தியாயமாக இது இருக்கும் என அமித்ஷா தெரிவித்தார்.

