புதுடெல்லி: மாதவிடாய் குறித்து இன்னமும் இந்தியாவில் அதிகம் பேசப்படாத நிலை நிலவி வருகிறது.
மாதவிடாய்க் காலத்தின்போது சமையலறைக்குள் செல்லவோ வீட்டில் கடவுளை வழிபடவோ மாதர் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால், அண்மைய காலமாக வேலைக்குச் செல்லும் மாதருக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் யோசனை குறித்து இந்தியா விவாதிக்கத் தொடங்கியுள்ளது.
மாதவிடாய் விடுப்புக்கெனச் சட்டம் ஒன்றை நடப்புக்குக் கொண்டுவருவதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறதா என்பது குறித்து டிசம்பர் 13ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.
சிறப்புக் காரணத்துக்காக சம்பளத்துடன் விடுப்பு தரும் வகையில் மாதவிடாய் என்பது ஓர் ‘ஊனம்’ அல்ல என்று இந்தியாவின் மாதர், சிறார் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி அதற்குப் பதிலளித்திருந்தார்.
மேலும், இத்தகைய சட்டத்தை நடப்புக்குக் கொண்டு வருவதால் ஊழியரணியில் உள்ள மாதருக்கு எதிரான பாகுபாடு நிலவலாம் என்றும் அவர் சுட்டினார்.
“மாதருக்கு ஏதோ ஒரு வகையில் சமமான வாய்ப்பு கிடைப்பதை நிராகரிக்கும் விவகாரங்கள் குறித்து நாம் யோசனைகளை முன்வைக்கக்கூடாது,” என்ற திருவாட்டி இரானி, இது தமது தனிப்பட்ட கருத்து கண்ணோட்டம் என்றும் அரசாங்கத்தினது அல்ல என்றும் குறிப்பிட்டார்.
மாதவிடாய் தொடர்பான களங்கத்தைக் கொஞ்சம் நீக்க உதவும் வகையில் மாதர் உரிமைகள் மற்றும் மாதவிடாய் சுகாதார ஆர்வலர்கள் பல ஆண்டுக்காலமாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதனால், மாதவிடாய் விடுப்புக்கான தேவை இந்தியாவில் வலுக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், சம்பளத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டால் பெண்களை வேலையில் அமர்த்த நிறுவனங்கள் தயங்குவதற்கு வழிவிடலாம்.
இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளில் பல தனியார் இந்திய நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்காக மாதவிடாய் விடுப்பை அறிவித்திருந்தன.
இருப்பினும், ஆண்கள் அதிகம் வேலை பார்க்கும் இடங்களில் இத்தகைய விடுப்பை எடுத்துக்கொள்ள பெண்களும் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.