புதுடெல்லி: இந்திய ரயில் பாதைகள் 95% மின்மயமாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் உலகின் ஆகப் பெரிய பசுமை ரயில் கட்டமைப்பாக இந்திய ரயில் கட்டமைப்பு உருவெடுத்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் உரையாற்றிய இந்திய ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் முகுல் சரண் மாத்தூர் இதனைத் தெரிவித்தார்.
“கடந்த 2023-24 நிதியாண்டில் ரயில்வே கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.85,000 கோடியை ஒதுக்கியது. இந்தியாவில் மொத்தம் 68,000 கி.மீ. நீளத்திற்கு ரயில் பாதைகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.
“ரயில் பெட்டிகள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முக்கிய வழித்தடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அன்றாடம் ஏறக்குறைய 2 கோடிப் பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர்,” என்றார் அவர்.
பயணச்சீட்டு முன்பதிவை ரத்து செய்வோருக்கு இரண்டு நாள்களுக்குள் தொகையைத் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப மேம்பாடு மூலம் விபத்துகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் திரு மாத்தூர் கூறினார்.
2047ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சீரான, நீடித்த பொருளியல் வளர்ச்சி வளர்ச்சியை ஊக்குவிக்க ரயில்வே துறையை நவீனமயமாக்க வேண்டியது அவசியம் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.