புதுடெல்லி: இந்தியாவிலேயே மிகவும் நீளமான சரக்கு ரயிலை மத்திய ரயில்வே அமைச்சு தொடங்கி உள்ளது.
ஏறத்தாழ 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட அந்த ரயிலில் ஏழு எஞ்சின்கள் இணைக்கப்பட்டு இருக்கும்.
ருத்ராஸ்த்ரா என்று பெயரிடப்பட்டு உள்ள அந்த ரயில் பற்றிய விவரங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“உலகத்திலேயே ஆக நீளமான இரண்டாவது சரக்கு ரயில் என்ற பெருமையையும் அந்த ரயில் பெற்றுள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிஎச்பி ரயில் (7.3 கிலோ மீட்டர் நீளம், 682 வேகன்கள்) உள்ளது. ருத்ராஸ்த்ரா ரயில் உத்தரப் பிரதேச மாநிலம் கஞ்ச்கவாஜா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) முதல் பயணத்தைத் தொடங்கி உள்ளது.
“சராசரியாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்று 5 மணி நேரத்தில் 200 கிலோ மீட்டர் தூரத்தை அந்த ரயிலால் கடக்கமுடியும். நேரத்தை சேமிப்பதோடு, அந்த ரயிலை இயக்குவதற்கான செலவும் குறைவு,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

