மாணவிகளைக் கிண்டல் செய்த, ஆபாசப் படம் பார்த்த மகனை தந்தையே கொன்றார்!

மாணவிகளைக் கிண்டல் செய்த, ஆபாசப் படம் பார்த்த மகனை தந்தையே கொன்றார்!

2 mins read
7fc96de0-30b1-4fc8-a66b-0a9cda190382
தன் 14 வயது மகனைக் கொன்ற விஜய் பட்டு (வலது). - படங்கள்: இந்திய ஊடகம்

மும்பை: தன் மகன் கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததாலும் பள்ளியில் மாணவிகளைக் கிண்டல் செய்ததாலும் வெறுத்துப்போன தந்தை, பானத்தில் நஞ்சு வைத்து மகனையே கொன்றார்.

இச்சம்பவம் இந்தியாவின் மராட்டிய மாநிலம், சோலாப்பூரில் 2024 ஜனவரியில் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து, தன் மகனைக் கொன்றதாக விஜய் பட்டு என்ற தையல்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஷால் என்ற 14 வயதுப் பையனைக் காணவில்லை என்று சென்ற மாதம் 13ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் ஒரு பையனின் உடல் கிடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

மாண்டுகிடந்தது விஷால்தான் என்பதை அவனுடைய குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். உடற்கூறாய்வு அறிக்கையில் அவன் நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொலை வழக்கு பதிவுசெய்த காவல்துறை, விஷால் குடும்பத்தாரிடம் விசாரித்தது. அவர்களது பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கவே, காவல்துறை விஷாலின் தந்தை விஜய்யைத் தனியாக அழைத்து விசாரித்தது. அப்போது, தன் மகனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

விசாரணையின்போது, தன் மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல், பள்ளியில் மாணவிகளைக் கிண்டல் செய்வதையும் கைப்பேசியில் ஆபாசப் படம் பார்ப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் காவல்துறையிடம் விஜய் கூறினார். தீய நடத்தைகளைக் கைவிடும்படி விஷாலிடம் அவனுடைய பெற்றோர் பலமுறை கெஞ்சியபோதும், அந்த அறிவுரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயின.

விரைவில், பள்ளியிலிருந்தும் தன் மகன்மீது புகார்கள் வரத் தொடங்கியதாக விஜய் குறிப்பிட்டார்.

தன் மகனின் நடத்தையால் வெறுத்துப்போன விஜய், ஜனவரி 13ஆம் தேதி அவனை மோட்டார்சைக்கிளில் வேறோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு, மென்பானம் ஒன்றை வாங்கி, அவனுக்குத் தெரியாமல் அதில் நஞ்சு கலந்து கொடுத்தார்.

சற்று நேரத்தில் விஷால் மயங்கி விழுந்துவிட்டதாகவும் அவனது உடலை விஜய் தம் வீட்டிற்கு அருகிலுள்ள சாக்கடையில் வீசியதாகவும் ‘இந்தியா டுடே’ செய்தி தெரிவித்தது.

அதே நாள் மாலையில், விஜய் தன் மனைவி கீர்த்தியோடு காவல் நிலையம் சென்று, தன் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.

ஆயினும், விஷாலின் உடல் கிடைத்ததால் விஜய்யின் சதி அம்பலமானது. ஜனவரி 29ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட விஜய்யை இரண்டு நாள்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்