புவனேஸ்வர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் பிரம்மாண்டத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) இடம்பெற்றது.
பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் அயோத்தியில் திரண்டிருந்த நிலையில், அங்கிருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவிற்கும் அப்பாலுள்ள இன்னோர் இடத்திலும் ஒரு ராமர் கோவில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
ஒடிசா மாநிலம், ஃபதேகர் எனும் சிற்றூரில், கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1,800 அடி உயரத்தில் மலைமேல் அக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
அக்கோவிலின் உயரம் 165 அடி என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோவிலின் கருவறை 65 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
கோவிலைச் சுற்றி, சூரியன், சிவன், பிள்ளையார், அனுமான் என நான்கு கடவுள்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு கோவிலைக் கட்டும் பணி தொடங்கியது. அதற்கான செலவில் பாதியை உள்ளூர்வாசிகள் ஏற்றுக்கொண்டனர். எஞ்சிய தொகையை மாநிலம் முழுவதுமிருந்த பக்தர்கள் நன்கொடையாக அளித்தனர்.
ஒடியா கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த மலைக்கோவில், சுற்றுப்பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.