புதுடெல்லி: இந்தியா, போர் விமானங்களுக்கான இயந்திரங்களை வாங்குவதற்கு அடுத்த பத்தாண்டில் $7.44 பில்லியன் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்குக் கிட்டத்தட்ட 1,100 இயந்திரங்கள் பல்வேறு போர் விமானங்களுக்குத் தேவைப்படுவதாக அரசாங்கத்தின் தற்காப்பு ஆய்வுக்கூடமொன்றின் இயக்குநர் எஸ் வி ரமணமூர்த்தி கூறினார். உள்நாட்டிலேயே இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளை அவர் வழிநடத்துகிறார்.
இந்தியா அதன் தேஜா ஜெட் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட காவேரி இயந்திரங்களைக் கொண்டு இயக்கும் முயற்சியில் பல்லாண்டாக ஈடுபட்டுள்ளது. சில தொழில்நுட்பச் சிக்கல்களால் அது இன்னும் கைகூடவில்லை.
“உள்நாட்டிலேயே போர் விமானங்களுக்கான இயந்திரங்களைத் தயாரிப்பதற்குரிய சூழலை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது,” என்றார் திரு மூர்த்தி. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசினார். அதற்கு அதிக உயரம் கொண்ட சோதனை நிலையம், தொழில்துறைத் தளம் போன்ற வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு தேவைப்படுவதாகத் திரு மூர்த்தி சொன்னார்.
இந்தியாவில் தற்காப்புச் சாதனங்களைத் தயாரிப்பதற்கான ஆற்றலைப் பெருக்க முனைகிறது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம். வெளிநாடுகளில் ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்ற வருமாறு அது அழைப்பு விடுத்துள்ளது.