இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த சில வாரங்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
மல்யுத்த வீரர்கள் மே 28 அன்று இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அவர்களை காவல்துறையினர் தடுத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக், பஜ்ரங் பூன்யாவும் இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாலை நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று பஜ்ரங் பூன்யா தெரிவித்துள்ளார்.
மீண்டும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அது எப்போது என்ற தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
மல்யுத்த வீரர்களைக் காவல்துறையினர் கைது செய்யும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. மல்யுத்த வீரர்களுக்கு இணையவாசிகள் ஆதரவு தெரிவித்தும் உள்ளனர்.