புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் உயிர்நாடியைப் பாதிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960இல் கையெழுத்திடப்பட்ட நீர்ப் பகிர்வு ஒப்பந்தமான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா வழியாகப் பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து, செனாப், ஜீலம், பியாஸ், ரவி, சட்லஜ் நதிகளிலிருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நதிகளின் நீர் குடிநீர், நீர்ப்பாசனம், மின் உற்பத்தி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
நீண்ட காலமாகப் பொருளியல் நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், மேலும் பாதிக்கப்படக்கூடும்.
குடிநீருக்கும் நீர்ப்பாசனத்திற்கும் பாகிஸ்தான் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. பாகிஸ்தானின் நீர்ப்பாசன நிலங்களில் சுமார் 80% சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. நீர் தடுப்பால் கோதுமை, அரிசி, பருத்தி போன்ற முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறையக்கூடும். இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியமானது.
தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானில் உணவு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்படலாம், இது லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு நெருக்கடியை உருவாக்கும். பாஸ்மதி அரிசி உட்படப் பல விவசாய ஏற்றுமதிகள் குறையலாம்.
அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கும் சிந்து நதி நீர் முக்கியமானது என்பதால் நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தானின் பல நகரங்கள் இருளில் மூழ்கக்கூடும். மின்சாரம் இல்லாமல் வணிகம் முடங்கும்.
பாகிஸ்தானின் கிராமப்புற வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும்.
மாகாணங்களுக்கிடையே நீர்ப் பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்படக்கூடும்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் நீர் நிறுத்தம் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நியச் செலாவணி கையிருப்பு, பாகிஸ்தானிய நாணய மதிப்பையும் பாதிக்கக்கூடும்.